வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. நாளை பிரதோஷம், வரும் 11ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு, நாளை முதல் வரும் 12ம் தேதி வரை 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். வரும் 11ம் தேதி பங்குனி அமாவாசை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவௌியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.