ெபங்களூரு: கர்நாடக மாநில ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதால் விரைவில் அரசு பஸ்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் என்று துணைமுதல்வர் அஷ்வத் நாராயண் தெரிவித்தார். ஜப்பான் நாட்டில் நடந்துவரும் சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் காணொலி மூலம் அவர் பேசியதாவது, ``நாட்டில் சீரான மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் மின் உற்பத்தி சீராக இருப்பதால், பற்றாக்குறை இல்லை. அதேபோல் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்வதிலும் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குகிறது. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் மின்மயமாக்கப்படும். அதன் முன்னோட்டமாக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கிடைத்து வரும் வெற்றியை தொடர்ந்து அனைத்து பஸ்களும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.