×

கோயில் வளாகங்களில் கூட்டம் கூடி கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேறக்கோரி முழக்கமிடும் கும்பல்: போலீசில் அனைத்து செயல் அலுவலர்கள் புகார்

சென்னை:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் தான், தமிழகத்தில் 44,120 சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. 56 திருமடங்கள், 57 திருமடத்துடன் இணைந்த கோயில்கள், 1721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள், 189 அறக்கட்டளைகள், 17 சமணத் திருக்கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், கடைகள், புராதன சிலைகள் விலைமதிப்பற்ற நகைகள் போன்றவற்றின் விவரங்கள் கண்டறியப்பட்டு அவையெல்லாம் கோயில்களின் சொத்து விவரப் பட்டியலில் இடம்பெறச் செய்யப்பட்டன. விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் புராதன சிலைகள் அனைத்தும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டன.

இந்த கோயில்களின் தினசரி பூஜை, விழாக்கால செலவுகள், அதன் வருமானம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வருமானம் இல்லாத கோயில்களில் கூட ஒரு கால பூஜை நடத்துவதற்கும் அறநிலையத்துறை சார்பில் நிதி தரப்படுகிறது. மேலும், திருப்பணி செய்ய முடியாத கோயில்களில் வருவாய் வரும் கோயில்களில் இருந்தும், தமிழக அரசின் நிதியில் இருந்தும் பெறப்படுகிறது. அறநிலையத்துறையின் இந்த செயல்பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 4112 ஆயிரம் கோயில்களில திருப்பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரம் கோயில்கள் புனரமைக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது திடீரென இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அந்த துறை வெளியேற வேண்டுமென ஒரு சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைக்கு அறநிலையத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறை ஆணையர் ரமண சரஸ்வதி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள கோயில் வளாகங்களில் அரசியல் சார்ந்த சில இயக்கங்கள் மற்றும் தனிநபர்களால் இத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று கூட்டம் கூடி முழக்கம் எழுப்பி கோயில் வளாகத்தை அரசியல் மேடை போல் பயன்படுத்துகிறார்கள் என தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாக நலன் கருதி இதுபோன்ற செயல்களை கோயில்கள் மற்றும் அதன் வளாகங்களில் நடைபெறுவதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

எனவே, இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரியவந்தால் இதனை தடை செய்திட வேண்டி அந்தந்த உள்ளூர் காவல் நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் சார்பாக எழுத்து மூலமாக கடிதங்களை அளித்திட வேண்டும். கோயில் வளாகங்களில் அரசியல் மற்றும் அரசு கொள்கைகளை விமர்சித்தோ, ஆதரித்தோ கூட்டங்கள் நடத்துவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகிகளே பொறுப்பாக்கப்படும் என்பதையும் அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, செயல் அலுவலர்கள் உள்ளூர் காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், அந்த கும்பல் அறநிலையத்துறையை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு கிராமப்பூசாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிராம கோயில் பூசாரிகள் சங்க தலைவர் பி.வாசு கூறுகையில், ‘‘இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் ஒரு சில குற்றம் குறைகள் இருப்பதை தவிர்க்க இயலாது. குற்றம் குறைகள் இல்லாமல் எந்த நிர்வாகத்தையும் நடத்த இயலாது. இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் அவ்வாறு குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியில் குற்றம் குறைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Tags : Crowds gather at temple premises and chant to leave temples
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...