×

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை : ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி : கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட் நோய் தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில், மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தவிர்க்க இயலாததாகும். கோவிட் தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 9-ம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும் என்றும், வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம் என்றும், மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள், எப்பொழுதும் போல எந்த முன் பதிவும் இன்றி தொடரும்.

இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் பெறலாம். பொதுமக்கள் `ஹலோ ஜிப்மர் எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு, முன் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவைப்படுவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பார்.நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் நூறு நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். கோவிட் தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க ஜிப்மர் மருத்துவமனையின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Zimmer Hospital , ஜிப்மர் மருத்துவமனை
× RELATED கடைசியில் இந்தி ஜிப்மர்...