×

திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக நடந்தது 4 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று அமைதியான முறையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வருகின்றன. இதில் மொத்தம் 5 லட்சத்து 16 ஆயிரத்து 177 ஆண், 5 லட்சத்து 38 ஆயிரத்து 372 பெண் மற்றும் இதர வாக்காளர் 69 பேர் என மொத்தம் 10 லட்சத்து 54 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், திருத்துறைப்பூண்டியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னார்குடியில் 357 வாக்குச்சாவடிகள், நன்னிலத்தில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 1454 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் 7 ஆயிரத்து 320 ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 442 போலீசார் ஈடுபட்டனர்.

நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் அதற்கு முன்னதாக காலை 6 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சியினரின் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணி அளவிலேயே பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

நன்னிலம்:
நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ் (அதிமுக) இரட்டை இலை, ஆர். ரவிச்சந்திரன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) யானை, எஸ். ஜோதிராமன் (திமுக) உதயசூரியன், என். ராமச்சந்திரன் (அமமுக) பிரஷர் குக்கர், டி. கணேசன் (இந்திய ஜனநாயக கட்சி) ஆட்டோ ரிக் ஷா மற்றும் சுயேட்சை உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதி என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நேற்று தொகுதி முழுவதும் வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்தனர். இதனால் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் நன்னிலம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீத வாக்குப்பதிவும், காலை 11 மணி நிலவரப்படி 24 சதவீத வாக்குப்பதிவும், மதியம் 1 மணி நிலவரப்படி 44 சதவீத வாக்கு பதிவும், மாலை 3 மணி நிலவரப்படி 67 சதவீதம் வாக்குப்பதிவும், மாலை 5 மணி நிலவரப்படி 74 சதவீதம் வாக்குப்பதிவும், இறுதியாக இரவு 7மணி நிலவரப்படி மொத்தம் சதவீதம் வாக்குகள் பதிவானது.

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து காடுவாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் பள்ளங்கோவில் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி ஏகேஎஸ். விஜயன் ஆகியோர் நொச்சியூர் சமத்துவபுரம் ஊராட்சிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தனர்.

திமுக எம்எல்ஏ ஆடலரசன் குன்னலூர் குடிசேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி வேதாரண்யம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் சிங்களாந்தி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா ரவி வேப்பஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்களித்தனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி கயல்விழி ஆய்வு செய்தார்.

மன்னார்குடி:

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த 357 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று கா லை 7 மணி முதல் வாக்கு பதிவு துவங்கியது. இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வந்த இளம் பருவத்தினர் ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசை யில் நின்று வாக்கினை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்ட அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் காலை முதல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டி ருந்த வாக்குச் சாவடி மையங்களில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவல ரும் வருவாய் கோட்டாட்சியருமான அழகர்சாமி அதிகாரிகளுடன் சென்று வாக்கு பதிவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடி டிஎஸ் பி இளஞ்செழியன் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Thiruvarur district , Thiruvarur: Voting in all the 4 assembly constituencies in Thiruvarur district was peaceful yesterday
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...