×

பாமாயில் இறக்குமதிக்கு இலங்கை உடனடி தடை: செம்பனைகளை அழிக்கவும் உத்தரவு

கொழும்பு: மலேசியா, இந்தோனேஷியாவில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் டன் பாமாயிலை இலங்கை இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில், இந்த இறக்குமதிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று திடீரென தடை விதித்தார்.  இது தொடர்பாக அதிபர் கோத்தபய வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாமாயில் இறக்குமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் செம்பனை சாகுபடிக்கும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் செம்பனை மரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ரப்பர் அல்லது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பிற மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இதன் மூலமாக பாமாயில் மற்றும் பனை சாகுபடி இல்லாத இலங்கையை உருவாக்க முடியும். இதன் மூலமாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழிலையும் ஊக்குவிக்க முடியும்,’ என கூறப்பட்டுள்ளது. உலகளவிலான பாமாயில் ஏற்றுமதியில் மலேசியா முன்னிலை வகிக்கிறது. ‘இலங்கையின் இந்த தடையால் தங்கள் நாட்டின் பாமாயில் தொழில்துறை பாதிக்காது,’ என்று  அது தெரிவித்துள்ளது.



Tags : Sri Lanka , Sri Lanka imposes immediate ban on palm oil imports
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...