×

சிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொழிலாளி உடல் சிதறி பலி

சிவகாசி : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் ராஜூ (48). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில், 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளி மற்றும் பண்டிகைகளுக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கெமிக்கல் அறையில், ஆனையூர் சமத்துவபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம் (46), வெடிமருந்து எடுக்க சென்றார். அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பாகங்கள் தூக்கி வீசப்பட்டு, ஆங்காங்கே மரக்கிளைகளில் தொங்கின. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி 5 பிள்ளைகள் உள்ளனர்.

விபத்தில் அருகில் உள்ள அறைகளில் இருந்த கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் (43), துரைச்சாமிபுரத்தை சேர்ந்த கந்தசாமி (52) ஆகியோர் படுகாயமடைந்தனர். 4 அறைகள் தரைமட்டமாகின. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இது தொடர்பாக மேனேஜர் கோமதிராஜ், போர்மேன் முத்துராஜ் ஆகியோரை மாரனேரி போலீசார் கைது செய்தனர். ஆலை உரிமையாளர் ராஜூ மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Tags : Sivakasi , Sivakasi: Raju (48) hails from Kakkivadanpatti near Sivakasi in Virudhunagar district. His own firecracker factory is in the same area.
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து