திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி, நகராட்சி தலைவர்கள் அத்தனை பேரும் தளித் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இன்று (நேற்று) வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கலவரங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தளி தொகுதி தேர்தலை ரத்து செய்வதற்கு உரிய சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் ஏற்படக் கூடிய சகலவிதமான பிரச்னைகளுக்கும் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டிவரும். இவ்வாறு அவர் கூறினார்.