×

பணம், பரிசுப்பொருள், சேலை தருவதாக கூறி அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன்கள் விநியோகம்: திருவில்லிபுத்தூர் தொகுதியில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் விநியோகிப்பதாக முன்னாள் எம்.பி அழகிரிசாமி தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ்ராவ், அதிமுக சார்பில் மான்ராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் கொடுத்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்ததும் டோக்கனை கொடுத்து பணம், சேலை, வேட்டி, பரிசுப்பொருட்களை பெறலாம் என வாக்காளர்களிடம், அதிமுகவினர் கூறி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் வேட்பாளர் மாதவ்ராவின் தலைமை முகவரான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி அழகிரிசாமி தேர்தல் கமிஷனில் நேற்று புகார் செய்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கி வருகின்றனர். தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்றவுடன் டோக்கனை காண்பித்து பணம், சேலை மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர். எனவே, இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்துள்ளேன்’’ என்றார்.

Tags : AIADMK ,Srivilliputhur , AIADMK distributes tokens to house, house, house, house, house, house, house, house, house, house, house, house, house
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...