×

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் அழகியநம்பிராயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள்பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 27ம்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினசரி நம்பிசுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளான கடந்த 31ம்தேதி நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான இன்று (5ம்தேதி) நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து விஷேச அலங்காரத்தில் நம்பிசுவாமிகள் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.

அதன்பின் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜஜீயர் வடம் பிடித்து வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொளுத்தும் வெயிலில் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து உற்சாகத்துடன் தேர் இழுத்தனர். விழாவையொட்டி பல வண்ண துணிகளாலும், பூக்களாலும் திருத்தேர் கண்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தது. இதனை முன்னிட்டு  அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேருக்கு முன் திருக்குறுங்குடி கோயில் யானைகள் சென்றன. நாளை திர்த்தவாரி நடைபெறுகிறது.

Tags : Temple of the Aesagianārāyā of Thirukungudi , Thirukurungudi Alagiyanambirayar Temple today Panguni Therottam commotion: Crowds of devotees darshan
× RELATED இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக...