×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து; உடல் சிதறி தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்

சிவகாசி: சிவகாசி அருகே இன்று காலை தனியாருக்கு சொந்தமான  பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி உடல் சிதறி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் ராஜு(48). இவருக்கு சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறையில் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.தற்போது தீபாவளி மற்றும் பண்டிகைகளுக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று காலை வழக்கம் போல், ஆலையில் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெமிக்கல் அறையில், ஆனையூர் சமத்துவபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம் (46), வெடி மருந்து எடுக்க சென்றார். இதில் மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் தர்மலிங்கம், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தார். சிதறிய அவரது உடல் பாகங்கள் கெமிக்கல் அறையில் இருந்து தூக்கி வீசப்பட்டு, ஆங்காங்கே மரக்கிளைகளில் தொங்கின. மேலும் இந்த விபத்தில் அருகில் உள்ள அறைகளில் இருந்த கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன்(43) மற்றும் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த கந்தசாமி(52) ஆகியோர் படுகாயமடைந்தனர். 4 அறைகள் தரை மட்டமாகின. காயமடைந்த கந்தசாமி அரசு மருத்துவமனையிலும், முருகன் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை ெபற்று வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டதும் மற்ற தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த இடத்தை சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையி–்ட்டு விசாரணை நடத்தினர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : OTP , Firecracker factory accident kills worker, kills 2
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி