அண்ணாநகர்: தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பூ மற்றும் பழக்கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது. பின்னர் நள்ளிரவு முதல் வழக்கம் போல் இயங்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளின் தீவிர தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, நாளை ஒரே கட்டமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கென அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பூ மற்றும் பழக்கடைகள் நாளை (6-ம் தேதி) வாக்குப்பதிவை முன்னிட்டு விடுமுறை விடப்படுகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. நாளை வாக்குப்பதிவு முடிந்ததும், நள்ளிரவு முதல் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.