கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே நெடுஞ்சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகர வட்டாரம், மாதானம், புதுப்பட்டினம் வழியாக பழையார் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் பொழுது சாலையோரம் இருக்கும் கருவேல மரங்களில் உள்ள முட்செடிகள் கண்ணில் பட்டு விபத்து ஏற்படுகிறது.
மேலும் இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், நாள்தோறும் பழையார் மீன்பிடி துறைமுகத்திற்கும், சீர்காழி, புத்தூர், எடமணல், ஆகிய ஊர்களுக்கு இந்த சாலையின் வழியாக சென்று வருகிறோம். இரவு நேரங்களில் சாலைகளில் அதிக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த சாலையின் வழியே செல்லும் வாகனங்கள் மாரி செல்லுகின்ற போதும், எதிரே சென்று கடந்து செல்கின்ற போதும் சாலை ஓரம் கருவேல முள் செடிகள் நீண்டு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.
மேலும் சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் சீரான போக்குவரத்து நடை பெறுவது சிரமமாக இருந்து வருகிறது. இந்த வாகனங்களுக்கு வழி விடும் பொழுது சாலையோரம் உள்ள கருவேல முட்செடிகள் கண்கள் மற்றும் உடலில் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நாள்தோறும் இருசக்கர வாகன ஓட்டிகள் சைக்கிளில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே எங்கள் பகுதி கோரிக்கையை ஏற்று தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து மாதானம் வரை சாலை ஓரம் உள்ள கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்களை அகற்றி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.