சின்னமனூர்: உள் இட ஒதுக்கீட்டுக்கு உறுதுணையாக இருந்த ஓபிஎஸ் மற்றும் அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்கு சமம் என சின்னமனூர் பகுதியில் ஆப்பநாடு மறவர் சமுதாயத்தினர் நேற்று பிரசாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில், வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்தது. இதனால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசார இறுதி நாளான நேற்று ஆப்பநாடு மறவர் சமுதாயத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துலாபுரம் மதியழகன் தலைமையில், அந்த சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முத்துலாபுரம், பரமத்தேவன்பட்டி, கே,.கே.பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தனர். அப்போது, ‘‘அதிமுக, பாஜவினரால் சீர்மரபினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு ஓட்டுபோடக்கூடாது.
10.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு உறுதுணையாக இருந்த ஓபிஎஸ்சுக்கும், அதிமுகவுக்கும் ஓட்டுப்போடுவது தற்கொலை செய்வதற்கு செய்வதற்கு சமம்’’ என பிரசாரம் செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.