தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று மாலை அஸ்தினாபுரம் பகுதியில் தொடங்கி ராதா நகர் பகுதி வரை நடந்தே சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் பல்லாவரம் தொகுதிக்கு நீர்த்தேக்க தொட்டிகள், சாலை வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து உள்ளேன். எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததும் ராதா நகர் சுரங்கப்பாதை இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரியுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும். அஸ்தினாபுரம் மற்றும் அனகாபுத்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 துணை மின் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். 2 மாதத்தில் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கு மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்படும். அரசு பெண்கள் கல்லூரி கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். அனகாபுத்தூர் பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிதாக கொண்டு வரப்படும்,’ என்றார். பிரசாரத்தின்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.