சென்னை: செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபுவை ஆதரித்து செய்யூரில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இறுதி கட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக அமைதியான ஒரு அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுக தோல்வியை சரி செய்வதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கோடி கோடியாய் கொட்டி செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளிலும் வென்று தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாறு படைக்க போகிறது. இதுவரை நடந்த தமிழக தேர்தல் வரலாற்றில் இந்தமுறை அதிக பெரும்பான்மையோடு திமுக ஆட்சியை கைப்பற்றும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக இப்போது இல்லை. எடப்பாடியின் அதிமுக, மோடியிடம் அடமானம் வைத்த அதிமுக. நீங்கள் இரட்டை இலைக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜவுக்கு போய் சேரும். தேர்தலுக்கு பிறகு அதிமுக மெல்ல மெல்ல கரைந்து போகும். தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற ஒரு கட்சியை இல்லாமல் போகும். பாஜவினர் இங்கே கால் ஊன்றினால் அமைதியும் சமூக நீதியும் பாதிக்கப்படும். பாஜ ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெயரை தக் ஷிணப் பிரதேசம் என மாற்றுவோம் என அறிக்கையிலேயே குறிப்பிடுகிறார்கள்.
பாஜ, கடவுள் பெயரை வைத்து மக்களை குழப்பி எவ்வளவு கீழ்த்தர அரசியல் செய்கிறது. நமக்கு இந்தி மொழி தெரியாது. அதனால்தான் மோடி மஸ்தான் வேலை இங்கே பலிக்கவில்லை. உங்கள் மொழியை நீங்கள் வளர்ப்பதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்கள் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம். சமூக சேவையில் பண்பு கொண்டவர் பனையூர் பாபு. அதனால்தான் பாபுவை உங்கள் கையில் ஒப்படைத்து இருக்கிறேன். பானை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.