திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
‘இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி பகுதியில் பிரசாரம் செய்தேன். அங்கு நூறு சதவீதம் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. எடப்பாடி பழனிசாமிக்கு பாளையங்கோட்டையா அல்லது புழல் ஜெயிலா என்பதை தலைவர் முடிவு செய்வார். கொஞ்சம் விட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாட்டை மோடியிடம் விற்று விடுவார்கள். தேர்தல் அறிக்கையில், இந்த தொகுதிக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
அவற்றை செயல்படுத்த மாதவரம் சுதர்சனத்தை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இவர் கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறைகூட சட்டமன்றத்திற்கு விடுமுறை எடுத்தது இல்லை. கடந்த 5 வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மோரையில் அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இவரது முயற்சியால் மெட்ரோ ரயில் திட்டமும் வர உள்ளது. நெமிலிசேரி- மீஞ்சூர் சாலை திட்டம், புழல் பகுதியில் 2 மருத்துவமனைகள் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள்,’ என்றார். பிரசாரத்தில் பகுதி செயலாளர்கள் துக்காராம், பரந்தாமன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், துரை வீரமணி, ஜெகதீசன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.