காரைக்கால்: திருநள்ளாறில் மோடி படத்துடன் வாக்காளர்களுக்கு பாஜகவினர் விநியோகம் செய்த தங்ககாசுகளை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜசேகரும், காங்கிரஸ் வேட்பாளராக கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர். திருநள்ளாறு தொகுதி முழுவதும் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் திருநள்ளாறு பகுதி முழுவதும் நேற்று காலை அதிரடியாக சோதனையிட்டபோது, அங்கு தங்க காசுகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. அப்போது பறக்கும் படையினரை கண்ட சிலர், கையிலிருந்த தங்க காசுகளை சாலையில் வீசி விட்டு தப்பி ஓடினர். பின்னர் பறக்கும் படையினர், சாலையில் கிடந்த 159 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.