×

புறக்கணித்த அதிமுக.. புலம்பலில் அஇமூமுக

அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட  இக்கட்சியின் பொதுச்செயலாளர் ராஜசேகர் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியான விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜ சார்பில் பாண்டுரங்கனுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று அதிமுக சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வைகைச்செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் வையாபுரி, ரவிமரியா பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

 ஆனால் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் அஇமூமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக அதிமுக தரப்பிலிருந்து பிரசாரத்திற்கு ஒருவர் கூட வரவில்லையாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில்  பிரசாரத்தில் ஈடுபட்டு  திருச்சுழி வழியாக அருப்புக்கோட்டை வைகைச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த போது முதல்வர் பழனிசாமி, வரும் வழியில் சில மணி துளிகள் கூட்டணி வேட்பாளரான ராஜசேகருக்கு ஆதரவு தெரிவித்து மக்களிடம் பேசியிருக்கலாம்.

 அப்போது ஒரே வாகனத்தில் முதல்வர் பழனிசாமி, வைகைச்செல்வனை ஏற்றிக் கொண்டார். ஆனால், திருச்சுழி வேட்பாளர் ராஜசேகர் தனித்து விடப்பட்டு, தூரத்தில் ஒரு வாகனத்தில் ஏறி நின்றும் பயனில்லை. அவரது பெயரையே உச்சரிக்கவில்லை. இது அஇமூமுக தரப்பினரை வெறுப்படையச் செய்துள்ளது. திருச்சுழி தொகுதிக்கு கூட்டணி கட்சிக்குள் புகைச்சல் அதிகளவில் உள்ள நிலையில், ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகள் மட்டும் பெயரளவிற்கு  பிரசாரத்துக்கு செல்வதால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ராஜசேகர் ஆதரவற்ற நிலையில் தேறுவோமா என்ற கவலையில் புலம்பித் தவித்து வருகிறார்.


Tags : AIADMK , புறக்கணித்த அதிமுக .. In lamentation அஇமூமுக
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...