கொடைக்கானல்: கொடைக்கானலில் குளுகுளு சீசன் தொடங்கியதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் குவிந்து வருகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளுகுளு சீசன் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களாகும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே குளுகுளு சீசன் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டது. தற்போது கொடைக்கானலில் இதமான சூழல் நிலவ தொடங்கி உள்ளது. வெயில் தரைப்பகுதியில் சதமடித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குளுகுளு சூழலை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தொடர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளான மோயர் பாய்ண்ட், தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
திடீரென மாறிவரும் காலநிலை பனி மூட்டம் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த குளு குளு சூழலை அனுபவித்தும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு கொடைக்கானலில் உள்ள போலீசார் சென்றுள்ளதால், போக்குவரத்தை சீர் செய்வதற்கு போதிய காவலர்களின்றி அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.