×

பேசாமலே கையசைத்து சென்ற விஜயகாந்த்: வேட்பாளர்கள் விரக்தி

திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் முரசு சின்னம், குக்கர் சின்னம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசாமலே கையை மட்டும் அசைத்துவிட்டு சென்றார். அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் தாமதமாக வந்தது பல மணி நேரம் காத்திருந்த வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் குக்கர் சின்ன வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த விஜயகாந்த் வேனில் நின்று கையை கூட அசைக்கவில்லையாம்.. சீட்டில் உட்கார்ந்தபடி தலையை தலையை ஆட்டிக்கொண்டு வணக்கம் சொல்லியபடி சென்றாராம்.. தொடர்ந்து, திருவெறும்பூர் தொகுதிக்கு சென்ற விஜயகாந்த், அங்கு பஸ் நிலையம் அருகில் வேனில் நின்றபடி முரசு சின்னத்தை மட்டும் காண்பித்துவிட்டு சென்றார்.

முசிறி தொகுதிக்கு வந்த விஜயகாந்த், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி இரு கைகளையும் உயர்த்தி முரசு சின்னத்தை காட்டினார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். ஆனால் விஜயகாந்த் பதிலுக்கு எதுவும் பேசாமல் புறப்பட்டு சென்றாராம். இதை பார்த்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். மணப்பாறை தொகுதி சென்ற விஜயகாந்த், அங்கும் பேசாமல் சென்றது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்த விஜயகாந்த், குன்னம், பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் வேனில் இருந்தபடி எழுந்து நின்று கை அசைத்துவிட்டு முரசு சின்னத்தை தூக்கி காட்டிவிட்டு சென்றாராம். இதனால் வேட்பாளர்களும் விரக்தி அடைந்தனர்.


Tags : Vijayakand , Vijayakand shakes hands without speaking: Candidates frustrated
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...