தமிழகத்தில் கடந்த 5 வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை பல குழப்பமான முடிவுகளை எடுத்துள்ளது. இதற்கு அத்துறையை நிர்வகிக்கும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக இருந்துள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் தொடங்கி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பி மாணவர்களை ஓர் அச்ச உணர்வுடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகாலம் ஆட்சி இருந்துள்ளது. காலையில் ஒரு அறிவிப்பு உடனடியாக அதை மாற்றி மாலையில் ஒரு அறிவிப்பு மறுநாள் அந்த இரண்டு அறிவிப்புகளும் செல்லாது என மற்றொரு அறிவிப்பு என அறிக்கைகள் வாயிலாக மாணவர்களையும் பெற்றோர்களையும் பீதியடைய வைத்துள்ளது இந்த அரசு.
குறிப்பாக தேர்வு முறைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் மாணவர்கள் பழைய பார்முலாவையே பின்பற்றி வருகின்றனர். வளர்ந்து வரும் நவீன கல்வி முறைக்கு ஏற்ப மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படவில்லை. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போட முடியாத சூழ்நிலையும் உள்ளது. இப்படி வருங்கால தமிழகத்தை உருவாக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை அதல பாதாளத்தில் தள்ளி பெருமை இந்த ஆட்சியாளர்களையே சாரும். அடிப்படைத் தேவையான கல்விக்கு புத்துணர்ச்சி தரும் ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதே சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.