×

ஓபிஎஸ் மகனிடம் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பு: போடியில் பரபரப்பு

அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க சென்ற ஓபிஎஸ்சின் இளைய மகனிடம், திமுகவுக்கு வாக்கு கேட்ட சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், போடி தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக போட்டியிடுகிறார். அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் வாக்கு கேட்டு பொதுமக்கள், சங்கத்தினரை சந்தித்து வருகின்றனர். போடி வஞ்சி ஓடை அருகில் உள்ள பாண்டிய மறவர் சங்கத்திற்கு, நேற்று காலை ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப் வாக்கு சேகரிக்க சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை வரவேற்று அமர வைத்தனர். அப்போது ஜெயபிரதீப், ‘‘3வது முறையாக அப்பாவை (ஓபிஎஸ்) எம்எல்ஏவாக்க, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். அப்போது சங்கத்தலைவரான காமராஜ், ஜெயபிரதீப்பிற்கு பொன்னாடை போர்த்தி, ‘‘நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஜெயபிரதீப், உடனடியாக அங்கிருந்து  புறப்பட்டு சென்றார்.

Tags : Vote collection for DMK for OBS son: Sensation in the contest
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி