இஸ்லாமாபாத்: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் தற்போதைய அசாதாரண சூழலில், எந்தவித வர்த்தகமும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால், பாகிஸ்தான் அரசு ஆத்திரமடைந்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை துண்டித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தடை ரத்து செய்யப்பட்டு, இந்தியாவிடம் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு திடீரென இந்த முடிவை கைவிட்டது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரோஷி நேற்று விளக்கம் அளித்தார். ‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் வரையில், இந்தியாவுடன் எந்தவித வர்த்தக நடவடிக்கையும் கிடையாது என்று பிரதமர் இம்ரான்கான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அரசியல் காரணங்களால் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்வதற்கான சூழல் இப்போது இல்லை. எனவே, பருத்தி மற்றும் சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியாவைத் தவிர மாற்று திட்டங்களைக் கூறுங்கள் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.