×

கொளத்தூரில் அவதூறு பிரசாரம் சுயேட்சை வேட்பாளர்கள் மீது திமுகவினர் போலீசில் புகார்

பெரம்பூர்: கொளத்தூர் தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பில் அசோக்குமார் என்பவரும், விஜயகுமார் என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பிரசாரம் செய்யும் இடத்தில் திமுக பற்றியும், திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை பொதுமக்களிடம் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ஐசிஎப் முரளி உள்ளிட்ட 10 பேர் அவர்களிடம், ஏன் இதுபோன்று அவதூறு  பிரசாரம் செய்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவருடன் இருந்தவர்கள் திமுகவினரை தகாத வார்த்தைகளால் திட்டி பகுதி செயலாளர் முரளிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து திமுக சார்பில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திமுக பற்றியும் அதன் தலைவர் ஸ்டாலின் பற்றியும் தவறான புகைப்படங்களை சித்தரித்து தவறான கருத்துக்களை சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், உடனடியாக போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kolathur ,DMK , DMK files complaint against independent candidates in Kolathur
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...