போடி: துணை முதலமைச்சர் போட்டியெடு போடிநாயக்கனூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த நபரிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் வருமானவரி துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இன்று காலை போடியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே உள்ள தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதனை தொடர்ந்து போடி நாயக்கனுர் 11-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக கட்சியை சேர்ந்த சித்தரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் 1.5லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இந்த பறக்கும் படையினரது சோதனை கடுமையாகி இருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி ஆண்டிபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் அமரேசன் என்றவர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றும் கூட ஆண்டிபட்டியில் உள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொகுதி முன்னாள் செயலாளர் ஈஸ்வரிமுருகன், தேமுதிக நகர செயலாளர் பாலாஜி, உள்ளிட்ட 4 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று முடிவடைந்துள்ளது. அந்த நிலையில் சோதனைகள் தீவிரமடைந்திருப்பது அரசியல் புள்ளிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.