*மூளைச்சலவை செய்வதாக பரபரப்பு புகார்
தேனி : போடி தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதா புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்த ஓபிஎஸ், தொகுதிக்கு எதுவும் செய்யாததால், அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இலவச சேலை, வேட்டி, துண்டுகள் கொடுத்து ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் வரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூலம், மகளிர் குழு நிர்வாகிகளை மூளைச்சலவை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேனியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 6 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘‘இந்த கோரிக்கைகளை அதிமுக, திமுகவினரிடம் தெரிவிப்போம். நாளை (ஏப். 4) மாலை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு எடுக்கும் முடிவின்படி, எந்த கட்சிக்கு ஆதரவு என முடிவு செய்வோம்’’ என பொதுச்செயலாளர் ராஜன் தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் ராஜன் போடி தொகுதியில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக, அவரது மருமகளுடன் சென்று வாக்கு சேகரித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவர் தொண்டு நிறுவனப்பெயரில் அதிமுகவுக்கு சாதகமாக மகளிர் குழுக்களை திசை திருப்பி, பணம் பட்டுவாடாவில் இறக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து நிருபர்கள், பொதுச்செயலாளர் ராஜனிடம், ‘‘கடந்த 5 வருடமாக தேனி மாவட்டத்தில் எந்த ஒரு தொண்டு நிறுவன பணியிலும் ஈடுபடாமல், தேர்தல் காலத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருடன் வாக்கு கேட்டு பிரசாரம் செய்யும் நீங்கள் எப்படி நடுநிலையோடு இருப்பீர்கள்’’ என கேள்வி கேட்டனர். இதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
மேலும், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசுக்கு பலமுறை கோரிக்கைகளை விடுத்தும் நிறைவேறாத நிலையில், ஏற்கனவே, திமுகவுக்கு எதிராக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடும் நீங்கள், 4ம் தேதி மாலை யாரை ஆதரிப்பது என முடிவு செய்யப்படும் என அறிவிப்பதில் உள்நோக்கம் உள்ளது’’ என நிருபர்கள் கேள்வி கேட்க, பதிலளிக்க முடியாமல் ராஜன் திணறினார்.