×

கலசபாக்கம் அருகே தேவாலயத்தில் வழிபட வந்தபோது மணல் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன், மகன் பலி

*மனைவி கண்முன்னே பரிதாபம்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே தேவாலயத்தில் வழிபட வந்தபோது, மனைவி கண்முன்னே மணல் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன், மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கடலாடி பகுதியை சேர்ந்தவர் தாஸ்(32), கூலி தொழிலாளி. இவரது மனைவி அல்போன்ஸ்(28). இவர்களது மகன் ஸ்தேவான்(5). இந்நிலையில், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, போளூரில் உள்ள தேவாலயத்தில் வழிபட தாஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் புறப்பட்டு சென்றார்.

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கொல்லை கொட்டாய் மேட்டு பகுதி அருகே வந்தபோது பின்னால் வந்த பைக் இவர்களது பைக் மீது லேசாக உரசியது. இதில், அல்போன்ஸ் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாஸ், பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் எதிர்பக்கம் சென்றுவிட்டார்.  அப்போது, அவ்வழியாக எதிரே வந்த மணல் லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் பைக் மீது மோதியது. இதில் பைக்குடன் லாரியின் அடியில் சிக்கிய தாஸ், சிறுவன் ஸ்தேவான் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கண்முன்னே  நடந்த கோர விபத்தில் கணவனையும், மகனையும் இழந்து அல்போன்ஸ் கதறி அழுதார்.

அப்பகுதி மக்கள் கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, படுகாயம் அடைந்த அல்போன்ஸை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புனித வெள்ளியன்று தேவாலயத்தில் வழிபட சென்றபோது நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்து, அவர்களது உறவினர்களையும், கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Kalasapakkam , Kalasapakkam, Road Accident, Father son Died, Two Wheeler accident
× RELATED சாலை வளைவில் கவிழ்ந்த தனியார் பள்ளி...