×

சொன்னாரே ? செஞ்சாரா? மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தும் எந்த பலனும் இல்லை: மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று மேட்டுப்பாளையம். தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 111-வது இடத்தில் இத்தொகுதி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இந்த தொகுதி உளளது. மேட்டுப்பாளையம் நகரத்தில், கழிவுநீர் செல்ல வசதியாக பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பணி முடிந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை. மேட்டுப்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் கருவேப்பிலை, எண்ணெய் பிரித்தல் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகளுக்காக, கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதைத்தவிர்க்க, மேட்டுப்பாளையத்தில் கருவேப்பிலை தொழிற்கூடம் அமைக்கப்படும் என இத்தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் வாக்குறுதி அளித்தார். ஆனால், நிறைவேற்றவில்லை.

பவானி ஆற்றை மையப்படுத்தி, பல ஆயிரம் கோடி மதிப்பில் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தின் தொடக்க பகுதியில் உள்ள காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இது, தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இங்குள்ள காகித அட்டை தயாரிப்பு மற்றும் துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், பவானி ஆற்றில் கலந்து நீர்நிலையை மாசுபடுத்தி வருகின்றன. இதை தீர்க்கவும் இத்தொகுதி எம்எல்ஏ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள பவானி ஆற்றை மையப்படுத்தி, பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தினாலும், இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. என்னை வெற்றி பெற செய்தால் வாரம் 4 நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார். ஆனால், வாரம் ஒருநாள்கூட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கையை இத்தொகுதி எம்எல்ஏ எடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த தொகுதியின் மற்றொரு முக்கிய பிரச்சினையாக மனித-வன விலங்குகள் மோதல் உள்ளது. அதிகளவில் வனப்பகுதியை உள்ளடக்கிய இந்த பகுதியில், மனித-வன விலங்கு மோதல் அடிக்கடி நடக்கிறது. இதனால், அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களையும் 40 சதவீதம் அளவுக்கு வனவிலங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன. இதை தடுக்கவும், எம்எல்ஏ நடவடிக்கை எடுக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்த மின்சார சலுகை, மூலப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை, பாவு நூல் விலையை குறைக்க நடவடிக்கை என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. சின்னராஜ், தொடர்ந்து 3வது முறையாக இங்கு எம்எல்ஏவாக உள்ளார். இவர், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தாலும், தொகுதிக்கென சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த பெரிய திட்டங்களும் சின்னராஜ் கொண்டுவரவில்லை, தொழிற்சாலைகளும் கொண்டுவரவில்லை. ஏற்கனவே அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால்,  இவர் மீதும், இவர் சார்ந்த அதிமுக மீதும் இத்தொகுதி மக்கள் கடும்  அதிருப்பதியில் உள்ளனர்.

‘சேவை செய்ய நினைத்தேன்,ஆனா முடியல...!’
ஓ.கே.சின்னராஜ் எம்எல்ஏ கூறுகையில்,தொகுதி மக்களுக்காக 15 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நான்காவது முறையாக கட்சியில் எனக்கு `சீட்’ கிடைக்கும், மக்களுக்கு இன்னும் சேவை செய்யலாம் என நினைத்தேன். ஆனால், தேர்தலில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு தரவில்லை. இருந்தாலும் நான் செய்த பணியை, மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்’’ என்றார்.

‘மக்களை மறந்தார்; ஓட்டம் பிடித்தார்’
கடந்த தேர்தலில் திமுக வேட்பாளரும், காரமடை ஒன்றிய செயலாளருமான சுரேந்திரன் கூறுகையில், இத்தொகுதிக்கு கறிவேப்பிலை பேக்டரி கொண்டு வருவேன் என்றார். கொண்டு வரவில்லை. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறும் என்றார். அதையும் நிறைவேற்றவில்லை. வாரம் 4 முறை சீரான குடிநீர் விநியோகம் செய்வேன் என்றார். ஆனால், ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. தொகுதி முழுவதும் ஓடாமல் கிடக்கும் அனைத்து கம்பெனிகளும் ஓடும் என்றார். ஓடவில்லை. எம்எல்ஏ பதவியை நன்றாக அனுபவித்தார், மக்களை மறந்தார், ஓட்டம் பிடித்துவிட்டார்’’ என்றார்.

Tags : Mettupalayam ,Chinnaraj , Did you say? Red? There is no point in being a three-time MLA: Mettupalayam MLA OK Chinnaraj
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது