×

மேற்கு மண்டலத்தில் பணம் விநியோக பொறுப்பு: சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைப்பு

சென்னை: மேற்கு மண்டலத்தில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டதால், பணம் விநியோகம் செய்யும் பொறுப்பு சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2014ம் ஆண்டு அதிமுகவினர் மக்களவை தேர்தலின்போது மின்சாரத்தை நிறுத்தி விட்டு இரவு நேரத்தில் வீடு வீடாக பணம் விநியோகம் செய்தனர். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக இருந்தனர். இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதால் பல அதிகாரிகள் ஆளும் கட்சியினர் கூறுவதை கேட்பதில்லை. இதனால் பல இடங்களில் ஆளும் கட்சியினர் பணம் விநியோகம் செய்வதை பொதுமக்களே தடுத்து,அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்து விடுகின்றனர். இதனால் மேற்கு மண்டல அமைச்சர்களே பணத்தை விநியோகம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் பணம் விநியோகம் செய்யும் பொறுப்பு, முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் தற்போது முக்கியமான விஐபிக்களின் தொகுதிகளின் பணம் விநியோக வேலைகளை செய்து வருகிறார்.
சத்தியமூர்த்தி, உளவுத்துறை ஐஜியாக பணியாற்றியபோது, அவரிடம் டிஎஸ்பியாக பணியாற்றியவர் ரமேஷ்பாபு. சத்தியமூர்த்தி ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நெருக்கமான ரமேஷ்பாபுவுக்கு கோவை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக பணி மாற்றம் வழங்கினார். தற்போது அவரை தேர்தல் பணிக்கு சத்தியமூர்த்தி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தியமூர்த்தியின் உத்தரவுப்படி ரமேஷ்பாபு, மேற்கு மண்டலத்தில் முக்கிய விஐபிக்களுக்கு பணம் விநியோகம் செய்யும் பணியை ஏற்றுள்ளார். அவர் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி தனியார் நிறுவனங்கள், அதிமுகவின் இளைஞர் பிரிவினர் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Western Zone , Responsibility for disbursement of money in the Western Region: Civil Supply handed over to CIT DSP
× RELATED செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி...