தைபே: தைவானில் மலையில் இருந்து உருண்டு விழுந்த லாரியால் விபத்தில் சிக்கிய ரயிலில், 48 பயணிகள் நசுங்கி இறந்தனர். பலர் படுகாயமடைந்தர்.தைவான் நாட்டு தலைநகரான தைபேவில் இருந்து தைடுங்குக்கு நேற்று காலை 400 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. ஹுவாலியன் நகரம் அருகே மலைகளுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, மலைப்பாதையில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று கவிழ்ந்து கீழே உருண்டு வந்தது. அது, ரயிலின் பக்கவாட்டில் விழுந்து ரயில் பெட்டிகளுக்கும் பாறைகளுக்கும் இடையே சிக்கியது. இதனால், ரயில் அதை இழத்துச் சென்றது. அங்குள்ள சுரங்கப்பாதையில் ரயில் நுழைந்தபோது, லாரியும் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது.
குறுகிய இடம் என்பதால், மேற்கொண்டு செல்ல முடியாமல் ரயிலின் வேகம் திடீரென தடைப்பட்டதால் அதன் பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், லாரியுடன் சிக்கிய பெட்டி ஒன்றும் சுரங்க சுவர்களுக்கு இடையே சிக்கி நசுங்கியது. அந்த பெட்டியில் பயணம் செய்த 48 பயணிகள் நசுங்கி இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.