கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது: தாராபுரம் மற்றும் மதுரையில் நடந்த பரப்புரையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் பிரதமர் மோடி. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒரு தொகுதியில் கூட அதிமுக வென்றுவிடக் கூடாது. மோடி பரப்புரை கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதல்வரால் பேச முடியுமா?, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணமான கட்சி அதிமுக தான்.
போராடும் விவசாயிகளை தரகர்கள் என கொச்சைப்படுத்தியவர் முதல்வர் பழனிசாமி. தமிழை புகழ்ந்து பேசும் மோடி கீழடி ஆய்வுக்கு அனுமதி தராதது ஏன்? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸின் தாக்குதலை மறக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்தரபிரதேசம் தான். தமிழ்நாட்டிற்கான நீதியை பிரதமரிடம் கேட்டுப் பெற முடிந்ததா? மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். ரெய்டு நடத்த நடத்த திமுக வலுப்பெறும், நாங்கள் என்ன அ.தி.மு.க.வா வருமான வரி சோதனைக்கு அஞ்சுவதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கக் காரணம் மோடியும் அல்ல அதிமுக அரசும் அல்ல, மெரீனாவில் புரட்சி நடத்திய இளைஞர்களின் போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.