சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மின்வெட்டு ஏற்படுவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த சிற்பத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் பேட்டியளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மின்வெட்டு ஏற்படுத்திவிட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அரசியல் கட்சிகளிடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ புகார் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 7,300 தபால் ஓட்டுகள் உள்ளதாகவும், அவற்றில் 6,591 தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகர தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 791 தபால் ஓட்டுகள் இன்னும் பெறப்படவில்லை, அவர்களுக்கான 2-ம் வாய்ப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட அனுமதிக்க படமாட்டார்கள் என பிரகாஷ் கூறினார்.
வெயில் காலங்களில் அதிக வெப்பநிலை காரணமாக மின் மாற்றிகளில் பழுது ஏற்படுவது வழக்கம் அதன் காரணமாகவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின் வாரியத்துறை தகவல் கூறியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்த்துறையினரும் விசாரணை நடத்துவதாக பிரகாஷ் தெரிவித்தார். அந்த பகுதியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எந்த புகார்களும் இதுவரை வரவில்லை என பிரகாஷ் கூறியுள்ளார்.