தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை மன்னப்ப முதலி தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் வண்ணை கணபதி வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுக்க கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக, வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், தேர்தல் அதிகாரிகளுக்கும், வருமான வரி துறை அதிகாரிக்கும் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சுமார் ஒரு மணிநேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. சோதனையின்போது, பணம் எதுவும் கைபற்றப்படவில்லை. இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை நிலவியது. மேலும், ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அதிமுக பிரமுகர் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், இத்தொகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது.