முல்பாகல்: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் கோரிக்கைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக மாநில அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவரும் முல்பாகல் தொகுதி எம்எல்ஏவுமான எச்.நாகேஷ் தெரிவித்தார்.முல்பாகல் தாலுகா பஞ்சாயத்து சார்பில் மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசும்போது, தாலுகாவின் புத்த விஹார் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தேவராயசமுத்திரம் அருகில் 5 ஏக்்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தின் சார்பில் புத்த விஹார் கட்டிடம் அமைத்து கொடுக்கப்படும்.
தாலுகா பஞ்சாயத்து நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் மானியம் முழுமையாக பயன்படுத்தி வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். தாலுகாவில் அரசுக்கு சொந்தமான 36 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. தலித் அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக நிலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அம்பேத்கர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்கும் ேயாசனை உள்ளது. இது தொடர்பாக திட்டம் வகுத்து மாநில அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்.
மேலும் தலித் வகுப்பினர்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குறை தீர்ப்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அப்போது பல தலித் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் குறுக்கிட்டு, தலித் மக்கள் கோரிக்களை எழுத்து மூலம் பெற்று செயல்படுத்த வேண்டும் என்று கூறியததை ஏற்றுகொண்ட நாகேஷ், அதை செயல் படுத்துவதாக உறுதியளித்தார்.