×

ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப்பட்டுவாடா செய்யும் அதிமுகவினர்: அதிமுக மீது நடவடிக்கை கோரி தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் மூலம் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் மனு கொடுத்துள்ளார். இதை தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆர்.நீலகண்டன் மற்றும் ஜெ.பச்சையப்பன் ஆகியோர் தமிழக இணை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்த்திடம் நேரில் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும்- அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள், குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், நேற்று இரவு பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வாக்காளர்களிடம் இருந்து அவர்களது அடையாள அட்டை விவரங்களையும்; அவர்களது செல்பேசி எண்களையும் பெற்று வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பே டிஎம் ஆன்லைன் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அதிமுகவினரால் பெறப்பட்டு வருகின்றன. மேலும் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது. இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை மற்றும் சோதனை சாவடிகளில், ஒருவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே சோதனை நடத்துவதோடு அல்லாமல் அவர்களிடம் வாக்காளர்களின் அடையாள அட்டை தகவல்கள் மற்றும் அவர்களது செல்பேசி எண் தகவல்கள் இருந்தால் அதனையும் கைப்பற்றவேண்டும். அதிமுகவினரின் இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை தடுக்காவிட்டால், அது நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த புகார் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : AIADMK fails to pay voters through Google Pay, Phone Pay, BDM
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...