சேலம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக-பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து போலீசார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதில், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் குணசேகரன் என்பவரும் சென்றிருந்தார். பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், அரவக்குறிச்சி தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை வெளியே வந்தார். அப்போது அவருடன் ஏட்டு குணசேகரன் செல்பி எடுத்துள்ளார். அந்த போட்டோவை தன்னுடன் பணியாற்றும் காவலர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளார். இந்த படம் வைரலாக பரவியது. இதையடுத்து சேலம் எஸ்பி தீபாகனிக்கர் விசாரணை நடத்தினார். அதில், சீருடையில் வேட்பாளருடன் படம் எடுத்துக்கொண்டது விதிமீறல். அதனால், ஏட்டு குணசேகரனை ஆயுதப்படைக்கு இடமாற்றி எஸ்பி தீபாகனிக்கர் உத்தரவிட்டுள்ளார்.