×

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. GPay, PhonePe,Paytm உள்ளிட்ட செயலிகளை ஏப்ரல் 6 வரை தடை கோரி மனு

சென்னை: ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார் எழுந்துவருகிறது. இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், அதிகாரிகள், எதிர்க்கட்சியினரிடம் சிக்காமல், ரகசியமாக பணப்பட்டுவாடா செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல; ஆனால், அரசியல்கட்சியினர் சளைத்தவர்கள் அல்ல. பணப்பட்டுவாடாவுக்கு தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளனர்.

வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரித்து, கூகுள்-பே மற்றும் ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதை சில கட்சியினர் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அதிமுக அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அமேசான், பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பணப்பட்டுவாடா தடுக்கும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி வரை பணப்பரிவர்த்தனை  செயலிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.தேர்தல் ஆணையம் தடை விதிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட நேரிடும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : GPay ,PhonePe ,Paytm , ADM, Google Pay, unpaid, processor
× RELATED பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா