அண்ணாநகர்: கோயம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(25). அதே பகுதியை சேர்ந்தவர் டேனியல்(30). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையே, ஏரியாவில் யார் தாதா என்ற போட்டியில் தகராறு காரணமாக, நடந்த சண்டையில், டேனியல் ராஜேஷ் என்பவரை கத்தியால் சராமரியாக வெட்டினார். இதுதொடர்பாக, ராஜேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோயம்பேடு போலீசார் ரவுடி டேனியலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த டேனியல் மறுபடியும் ராஜேஷை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்.
இதுகுறித்து, ராஜேஷுக்கு அவரது நண்பர் மூலமாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து, ராஜேஷ் நேற்று கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கோயம்பேடு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி டேனியலை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரவுடி டேனியல் மீது, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.