சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா நேற்று காலை முடிச்சூர் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள், மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து சிறப்பாக வரவேற்றனர். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதிமுக அரசு சார்பில் செய்யவிருக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் எடுத்துரைத்து தன்னை வெற்றிபெற செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.அப்போது, பொதுமக்கள், “நீங்கள் அமைச்சராக இருந்தபோது தாம்பரம் தொகுதிக்கு செய்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.
மீண்டும் அது போல வளர்ச்சித் திட்ட பணியில் தாம்பரம் தொகுதிக்கு கிடைத்திட உங்களுக்கே வாக்களிப்போம்” என நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டி.கே.எம்.சின்னையாவை ஆதரித்து தாம்பரம் கேம்ப்ரோடு சந்திப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்து சின்னையாவுக்கு வாக்குகேட்டார். அதிமுகவின் வாக்குறுதிகள் வெற்ற பெற்ற பின்னர் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.