தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீதி, வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘‘நான் இரண்டு முறை தாம்பரம் நகர மன்ற தலைவராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும்போது பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். அதில், குறிப்பாக ரங்கநாதபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக சிமென்ட் சாலைகள் அமைத்துத்தரப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தரவேண்டும். சாலையோர மின் விளக்குகள் அமைத்துத் தரவேண்டும்.
குடிநீர் கிடைக்க சிறிய மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்து உள்ளீர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களுக்காக செய்திட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்,’’ என அவர் உறுதியளித்தார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.