செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் - திருக்கச்சூர் இடையே உள்ள ரயில்வே மேம்பால பணி விரைந்து முடிக்கப்படும் என திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் உறுதியளித்தார். செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தனது சொந்த கிராமமான ஆப்பூர், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் ராஜா தெரு, பஜனைகோயில் தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, அம்பேத்கர் தெரு, மலைக்கோயில் ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கிராம மக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம கோயில்களில் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ஆப்பூர், சேந்தமங்கலத்தில் தார்சாலை, சிமென்ட் சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரேஷன்கடை, அங்கன்வாடி மையம், பள்ளிக்கட்டிடம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். கொரோனா காலத்தில், செங்கல்பட்டு தொகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு சார்பில் எவ்வித உதவியும் செய்யவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வழங்கிய அறிவுரைபடி, தொகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், தினக்கூலி பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பை வீடு தோறும் நானும், திமுகவினரும் வழங்கினோம்.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, சிங்கபெருமாள்கோயில் - திருக்கச்சூர் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி, திமுக ஆட்சி அமைந்தவுடன விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் நீண்ட வருடமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும். வளமான, ஒளிமயமான தமிழகத்தை உருவாக்கவும், 10 ஆண்டு ஊழல் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பவும் உதயசூரின் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்றார்.
இந்ந பிரசாரத்தில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், விசிக தொகுதி செயலாளர் தென்னவன், ஊராட்சி செயலாளர் ரவிசந்திரன், கிளை செயலாளர்கள் சீனுவாசன், குமாரசாமி, டேவிட், பாஸ்கர், வீரராகவன், கமல்ராஜ், முருகன், கண்ணையன், சரவணன், வினோத், மகளிரணி நிர்வாகிகள் மாலா, சகிலா, ஸ்டெல்லா, ஈஸ்வரி, திலகம் உள்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.