கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இத்தொகுதியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘‘வானதி சீனிவாசன் அரசியலுக்கு லாயக்கற்றவர்’’ என ஒரு பிடிபிடித்தார். இதற்கு பதிலடியாக நேற்று இரவு பிரசாரம் செய்த, வானதி சீனிவாசன் கமல் மீது பாய்ந்தார்.
அவர் பேசுகையில், ‘‘நான் கேட்கிறேன்.. அந்த நடிகர்கிட்ட.., நீங்க இத்தனை நாள், ‘லிப் சர்வீஸ்’ மட்டும்தான் பண்ணீங்க... ‘லிப் சர்வீஸ்’ என்றால் என்ன? அதை இரண்டு அர்த்தத்தில் நீங்கள், அவருக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒண்ணு, உதட்டளவில் சேவை பண்றது, இன்னொண்ணு, உதட்டுக்கு மட்டுமே சேவை பண்றது. இதில், அந்த நடிகர் இரண்டாவது ரகம். இப்படிப்பட்ட நீங்கள், என்னைப்பார்த்து துக்கடா அரசியல்வாதி என சொல்லலாமா? நான், கோவையில் மக்கள் சேவை மையம் நடத்தி வருகிறேன். அதன்மூலம், மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து வருகிறேன். இதில், ஒரு சதவீதம்கூட அந்த நடிகர் செய்திருக்க மாட்டார். தற்போது, தேர்தல் என்றவுடன், வேஷம் போட்டுக்கொண்டு, உங்கள் முன் வந்து நிற்கிறார்’’ என்றார்.