திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மாதவரம் கண்ணபிரான் கோயில் தெரு, உடையார் தோட்டம், தபால் பெட்டி, கே.கே.ஆர் கார்டன், சூரப்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மாதவரம் வி.மூர்த்தி மக்கள் மத்தியில் பேசுகையில், ‘இந்த பகுதியில் தரமான சாலை, சிறுவர் பூங்கா, தெருவிளக்குகள், உடற்பயிற்சி கூடம் போன்ற அடிப்படை வசதிகளை அதிமுக அரசு செய்து கொடுத்துள்ளது.
இந்த தொகுதியில் ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு அம்மா அரசின் தேர்தல் வாக்குறுதிபடி அரசு பணியில் முன்னுரிமை கொடுத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ள அத்தனை சலுகைகளும் உங்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வெற்றிபெறச் செய்யுங்கள்,’ என்றார். பகுதி செயலாளர்கள் வேலாயுதம், எம்.கண்ணதாசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் எம்.தமிழரசன் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.