பெங்களூரு: மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று மாநில செய்திதொடர்பாளர் ஜெகதீஷ் வி சதம் தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: ``மாநில தேர்தல் ஆணையம் பல்லாரி மாநகராட்சி உட்பட தொட்டபள்ளாபூர், ராம்நகர், சென்னபட்ணா, ஷிரா, பத்ராவதி, மடிக்கேரி, பீதர் உட்பட 7 நகரசபைகள், விஜயபுரா, பேலூரு, தரிகெரே உட்பட 3 பேரூராட்சிகள், குடிபண்டே, தீர்த்தஹள்ளி உட்பட 2 டவுன் பஞ்சாயத்துக்களுக்கு ஏப்ரல் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் 312 உள்ளாட்சி, 35 நகரசபை வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும். இதற்கான ஏற்பாடுகளை கட்சி சர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போல் ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டும் என்று உள்ளாட்சி தொகுதிகளை சேர்ந்த மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிகமான இடங்களில் கட்சி வேட்பாளர்களை மக்கள் வெற்றிபெற செய்ய முடிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாநில நிர்வாகிகள் சுற்று பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் படித்த இளைஞர்கள், சமுக சேவையில் அக்கரை கொண்டவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்’’ என்றார்.