×

ஹோலி கொண்டாட்டத்தில் விதிமீறிய 3,000 பேருக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் தகவல்

புதுடெல்லி: ஹோலி கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறயதாக சுமார் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு அபாரத ரசீது வழங்கப்பட்டதாக போக்குவரத்து துறை போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். குறிப்பாக, பொதுவெளியில் எந்தவொரு ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என தெரிவித்து இருந்தனர். மேலும், நகரின் முக்கிய சந்திப்புகளில் ரோந்து போலீசாரும், கண்காணிப்பு குழுவும் ஈடுபடுத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதோடு, சட்ட நடவடிக்கை பாயும் என்றும் போக்குவரத்து கமிஷனர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

அதன்பி, நேற்று முன்தினம் டெல்லி நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் தனிப்படை போலிசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போலிசாரின் அறிவுறுத்தல்களை மீறி நேற்று முன்தினம் பலரும் ஹோலி கொண்டாடினர். இதையடுத்து, விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் என 100 பேருக்கு அபராதம் விதித்தனர். வெவ்வெறு வகைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 3,282 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என்கிற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது. ஹோலி கொண்டாட்ட நாளில் வாகன விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுபற்றி போக்குவரத்து துறையின் இணை கமிஷனர் மீனு சவுத்ரி தெரிவித்தாவது: ஹோலி கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 3,282 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 1,255 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிவயர்கள். வாகனத்தில் மூன்று பேர் வரை (டிரிபிள்ஸ்) அமர்ந்து சென்ற வகையில் 170 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, குடித்து வாகனம் ஓட்டிய வகையில் 100 பேருக்கும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 121 பேர் மற்றும் வெவ்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய வகையில் 1,636 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.

* முககவசம் அணியாத 700 பேருக்கு அபராதம்
ஹோலி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் முககவசம் அணியாமல் பொதுவெளியில் திரிந்த 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று, சமூக இடைவெளியை பின்பற்ற தவறியவர்கள் மற்றும் பொதுவெளியில் எச்சில் துப்பியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக, திங்களன்று மாலை 4 மணிவரை, முககவசம் இன்றி திரிந்த 730 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டன. 9 பேருக்கு சமூக தொலைதூர விதிமுறைகளை பின்பற்றாததற்காகவும், மூன்று பேர் பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது. 94 பேருக்கு முககவசங்கள் வழங்கப்பட்டன.கடந்த ஆண்டு ஜூன் 15 முதல் தேசிய தலைநகரில் மொத்தம் 5,73,457 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,27,258 முககவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

Tags : Holi ,Traffic police , 3,000 fined for violating Holi celebration: Traffic police report
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!