வேதாரண்யம் :வேதாரண்யம் அருகே அவரிக்காட்டில் சாலை வசதி வேண்டி வீடுகள் மற்றும் தெருவில் கருப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா அவரிக்காடு ஊராட்சி 7 வது வார்டில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் ஒத்தையடிப் பாதையில் மக்கள் நடந்து செல்கின்றனர்.
ஆங்காங்கே உள்ள வீடுகளுக்கு பொதுவான சாலை அமைத்து தரக்கோரி கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை வசதி செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஏழாவது வார்டில் சாலை வசதி செய்து கொடுக்க வில்லை. இதனால் தற்போது வரும் 6ம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளிலும், வீதிகளிலும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்து உள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அடிப்படை வசதி கேட்டு இக்கிராமத்தில் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.