×

அதிமுகவுக்கு எதிராக சுயேட்சையாக போட்டி.. ஒரே நாளில் 8 நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ்- ஒபிஎஸ் அதிரடி!!

சென்னை : அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். அவர்களை கட்சியில் இருந்து  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நீக்கம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக மகளிர் அணி செயலாளர் லட்சுமியையும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபனையும் கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.அதிமுக வேட்பாளர், கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை குறிக்கோள் களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபன் ஆகியோர் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தினால் அவ்விருவரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  .

இதனிடையே அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தேர்தல் பணி ஆற்றியதாக கட்சியில் இருந்து மேலும் 6 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.பி. வி.ஏழுமலை, திருப்பூர் நிர்வாகிகள் ஈஸ்வரி, ஈஸ்வரசாமி, நாகராஜ், ரங்கசாமி, கே.கமலஹாசன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.


Tags : AIADMK , அதிமுக
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...