பொள்ளாச்சி : பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் நேற்று முன்தினம் மாலையில், வடக்கு ஒன்றியம் கிழக்கு பகுதிக்குட்பட்ட ஆச்சிப்பட்டி,ஆர்.பொன்னாபுரம்,ஒக்கிலிபாளையம், நஞ்சேகவண்டன்புதூர்,சந்தேகவுண்டன்பாளையம்,போத்தனூர்,குள்ளக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதில் குள்ளக்காபாளையம் கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் தலைமையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின்போது,ஒன்றிய பொறுப்பாளர் மருதவேல், ஊராட்சி தலைவர் கார்த்திகேயினி, துணை தலைவர் சண்முகசுந்தரம், கிளை செயலாளர் கதிர்வேல், ஊராட்சி உறுப்பினர் சம்பத், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், ஆதிதிராவிட நலக்குழு திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் காங்கிரஸ், மதிமுக, கொமதேக, மஜக, மமக, விடுதலைசிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் பேசுகையில், ‘தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது, விவசாயிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எண்ணற்ற நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்றால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதில், எந்த சந்தேகமும் கிடையாது.
இதில் குறிப்பாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல திட்டங்களை வகுக்கப்படும். திமுக ஆட்சி அமைத்தவுடன் நெசவாளர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் வீடு கட்ட ரூ.4லட்சம் மானியம் வழங்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டாக அதிகரிக்கும். இப்படி பல்வேறு திட்டங்கள் நிறைவேற, உதய சூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன் இவ்வாறு வேட்பாளர் டாக்டர்.வரதராஜன் பேசினார்.