ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழாவை 8 வார்டுகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில், ஒரு சமுதாய மக்கள் கோயில் தங்களுக்கு மட்டும் சொந்தம் என கூறி மற்ற சமுதாய மக்களை, 3 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கி வைத்தனர். இதனால், மற்ற சமுதாய மக்கள், கோயில் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானது என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையிடம் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் அதிகாரிகள் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்றனர்.
தற்காலிக நிர்வாக கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.ரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறையிடம் பொறுப்புகளை நிர்வாகத்தையும் ஒப்படைத்தார். இந்நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஆண்டிபட்டி டிஎஸ்பி. தங்ககிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் முத்து, சப்இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமய அறநிலைத்துறை கோவிலை ஏற்றுக்கொண்டதால், அனைத்து சமுதாயம் சார்பில் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.